எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

முல்லைத்தீவு நல்லிணக்க மையமும் தொழில் பயிற்சிகளும்


யுத்தத்தின் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய முல்லைத்தீவு மக்களுடைய மனதில் அவர்களது எதிர்காலத்தை குறித்து  பல்வேறு கேள்விகள். சொந்த இடத்திற்கு திரும்பிய திருப்தி இவர்களிடம் காணப்படுகின்ற போதிலும், மீள்குடியேற்றப்பட்டு 3 வருடங்கள் கழிந்த நிலையில் வாழ்கையில் முன்னேற்றங்கள் இல்லையே என்ற ஏக்கமும் இவர்களிடம்  காணப்படுகின்றது. முக்கியமாக உயர் தரக் கல்வியை முடித்தவர்கள், பாடசாலை கல்வியை இடையில் கைவிட்டவர்கள்  அடுத்ததாக என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். ஏனெனின் உயர் தரத்தில் சித்தியடைந்து சிலர் மட்டுமே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.  வசதியுடைய சிலர் நகர்ப்புறங்களிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களை நாடிச் செல்வதோடு ஏனையோர் தொழில் வாய்ப்புக்களை தேடிச் செல்கின்றனர். மிகவும் குறைந்த வாய்ப்புகள் மற்றும் வளங்களின் காரணமாகவே இந்நிலை அங்கு நிலவுகின்றது. இந்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி  முல்லைத்தீவு இளைஞர், யுவதிகளுக்கு ஒரு  சிறப்பான எதிர்காலத்தை அமைத்துகொடுப்பதை நோக்காகக் கொண்டு, இவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்காக, ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் நல்லிணக்க மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் நல்லிணக்க மையமானது கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முல்லைத்தீவில் உள்ள முள்ளியவளை எனும் இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்  நல்லிணக்க மையத்தினூடாக தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, வர்த்தக முயற்சியாண்மை போன்றவற்றில் மாணவர்கள் தமது திறன்களை விருத்திசெய்வதற்கான பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலவசமாக வழங்கப்படும் இவ் பயிற்சி நெறிகள் ஊடாக மாணவர்கள் முழுமையான பயனை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை கருத்திற் கொண்டு கணணி, இன்டர்நெட் போன்ற பல வசதிகள் இங்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் இம் முயற்சியானது நவீன காலகட்டதிற்கு ஏற்ப புதிய தொழில் முறைகளை முல்லைத்தீவு மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவது மாத்திரமின்றி இதனூடாக புதிய தொழில் வாய்ப்புக்கைளை இம்மக்கள் பெற்றுக்கொள்வதட்கும் இது வழிவகுக்கின்றது. 
      

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான ஒரு புதிய முயற்சியின் ஆரம்பம்


பெண்களுக்கு எதிரான வன்முறையானது தீர்வற்ற ஒன்றாக, காலங் காலமாக அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் இலங்கையிலும் இப்பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வரும் செயலாக காணப்படுகின்றது. முக்கியமாக கொழும்பு போன்ற பிரதான நகர்ப்புறங்களில் அதிகமான  சந்தர்ப்பங்களில் பெண்கள் பல வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதிலும் முக்கியமாக பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்களிடம் வார்த்தை பிரயோகங்களால்,     உடல் மற்றும் உளவியல் ரீதியாகவும் வன்முறைக்குட்பட்ட  அனுபவங்கள் அதிகமாகவே உள்ளன. சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆய்வொன்றின் அடிப்படையில், 15 தொடக்கம் 45 வயதிட்கிடைப்பட்ட 70 வீதமான பெண்களிடம் பஸ்ஸில் பயணம் செய்யும்போது, பாலியல் ரீதியான வன்முறைக்குட்பட்ட அனுபவங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் நீண்ட காலமாக அமைதியாகவே  இருந்து வருகின்றனர். இந்த அமைதியை கலைப்பதற்கான ஒரு முன்னெடுப்பே ஒன்று சேர்வோம் இலங்கை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் SHOW YOUR CARE எனும் நிகழ்ச்சித்திட்டமாகும். இளம் தொண்டர்களையும், பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று இப்பிரச்சினைக்கு எதிர்நின்று செயற்படுவதன் ஊடாக ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஒன்று சேர்வோம் இலங்கை அமைப்பு தீர்மானித்ததற்கிணங்க, இத்திட்டம் கடந்த வருடம் ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிலுள்ள திறந்த வெளி திரையரங்கில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த இளம் தொண்டர்களும், கொழும்பிலுள்ள பிரபல ஆண் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த பாதிப்புக்கள் எந்தளவிற்கு தாக்கம் செலுத்துகின்றது என்பதை மையப்படுத்திய மக்கள் அரங்கம் (Forum Theatre) நிகழ்ச்சியும், கலந்துரையாடல்களும் நடைபெற்றிருந்ததோடு வித்தியாசமான வயதெல்லைகளையும், கலாசார பின்னணிகளையும் கொண்ட பெண்கள் பொதுசன போக்குவரத்தின்போது தாம் எதிர்நோக்கும் அசெளகரியங்கள் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டிருந்தனர்.   

SHOW YOUR CARE  திட்டமானது முதலாவதாக 2012 ஜூன் 25 தொடக்கம் 29 ஆம் திகதி வரை கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது. இளம் தொண்டர்களையும், பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கிய 200 பேரைக் கொண்ட குழுவினர் சுவரொட்டிகள் மற்றும், துண்டு பிரசுரங்களுடன் பஸ்களுக்குள் சென்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவதற்கு  எதிராக ஆண்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், சட்டத்தில் எது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்த விழிப்புணர்வையும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில்  வழங்கியிருந்தனர்.SHOW YOUR CARE குழு 5 நாட்களில் சுமார் 1000 பஸ்களில் இந்த விழிப்புணர்வு செயற்பாட்டை மேற்கொண்டிருந்தது. 

வெற்றிகரமாக நடைபெற்ற முதற்கட்ட SHOW YOUR CARE  திட்டத்திற்கு பங்களிப்புச் செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதேவேளை இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக கண்டி மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளில்  விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.